தனிக்கட்சி இல்லை.. ஆட்சியையும், அதிமுகவையும் கைப்பற்ற போவது இப்படித்தான்.. தினகரன் சொல்லும் பிளான்
அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்பது குறித்து டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
Recommended Video
கோத்தகிரி : தான் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் மக்கள் மன்றம் மூலமாகவும், நீதிமன்றம் மூலமாகவும் மீட்கும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
கோவையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தினகரன், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்தும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதை எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி.டி.வி தினகரன் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கோத்தகிரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
தனிக்கட்சி அறிவிப்பு இல்லை
தனக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கு எண்ணம் அறவே இல்லை என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பது குறித்து தொடர்ந்து மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் என்கிற முறையில் வழக்கை நடத்தி நீதிமன்றம் உதவியுடன் விரைவில் அதை மீட்போம் என்று தெரிவித்து உள்ளார்.
கட்சியை மீட்ட ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் மறைவின் போதும் இதே போல கட்சி மற்றும் ஆட்சி குறித்து சிக்கல் எழுந்த போது, ஜெயலலிதா தனியாக வேறு சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுத்தார். அதுபோன்ற நிலையே தற்போது தங்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. அவரை போலவே நாங்களும் கட்சியை மீட்போம் என்று தினகரன் தெரிவித்தார்.
மக்கள் மன்றத்தில் முடிவு
வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு நாங்களும் கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுப்போம். அதிமுகவை துரோகிகளிடம் இருந்து கைப்பற்ற நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று டி.டி.வி தினகரன் உறுதியாக தெரிவித்து உள்ளார்.