எடப்பாடி ஆட்சி கலைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்... சொல்வது டிடிவி தினகரன்
கருத்து சுதந்திரத்தை பறிப்பதால் மக்கள் கோபத்தை சந்திக்கிறது எடப்பாடி அரசு என்று தருமபுரியில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தருமபுரி: பழனிசாமி தலைமையிலான் அரசு, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விரைவில் புதிய ஆட்சி தமிழகத்தில் அமையும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி ஆட்சி கலைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
தருமபுரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதிமுகவின் 46 வது ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், நம்மிடம் உண்மையான தொண்டர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அவர்களிடம், பணத்துக்கும், டெண்டருக்கும், எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிக்கும்தான் இருக்கிறார்கள்.
மக்கள் அகற்றுவார்கள்
எடப்பாடி ஆட்சியில் ஜெயலலிதாவின் திட்டங்களை எதுவும் சரிவர தொடரவில்லை. மழைக்கான முன்னெச்சரிக்கை அரசுக்குக் கிடைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுகவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் விரைவில் அரசியலை விட்டு அகற்றப்படுவார்கள் வரலாறு திரும்பும்.
பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அவர் கை காட்டிச் சென்ற கருணாநிதியை முதல்வராக ஏற்றுக்கொண்டார் எம்ஜிஆர், ஆனால் அதன் பிறகு எம்ஜிஆர் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதேபோல் இப்போது பொதுச்செயலாளராகிய சசிகலா மீதே நடவடிக்கை எடுக்கிறார் முதல்வர் பழனிசாமி.
எடப்பாடி அரசு கவிழும்
இயக்கத்தின் பெயரை கெடுக்கிறார்கள், அதனால்தான், இந்த ஆட்சியை அகற்றவேண்டும் என்கிறோம்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான் அரசு, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விரைவில் புதிய ஆட்சி தமிழகத்தில் அமையும், என்றார்.
கஜானாவை தூர்வாரி விட்டனர்
இதற்கு புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள 50 லட்சம் இளைஞர்கள் தனக்கு துணை நிற்பார்கள் என்றும் தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஏரி குளங்களை தூர் வாருவதாகக் கூறி, அரசு கஜானாவை தூர்வாரி விட்டதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
மக்களின் விருப்பம்
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கலையவேண்டும் என்பது மக்கள் விருப்பம் என்று கூறினார். கருத்து சுதந்திரத்தை பறிப்பதால் மக்கள் கோபத்தை சந்திக்கிறது எடப்பாடி அரசு என்றும் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி போலி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஓபிஎஸ் அணியின் போலி பிரமாண பத்திரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.