முதல்வர், அமைச்சர்கள் தரம் தாழ்ந்து பேசுவது பதவிக்கு ஏற்புடையதல்ல : தினகரன்
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரம் தாழ்ந்து பேசுவது அவர்களது பதவிக்கு ஏற்புடையதல்ல என்று தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் விமர்சனம் என்கிற பெயரில் தரம் தாழ்ந்து பேசுவது அவர்களின் பதவிக்கு ஏற்புடையதல்ல என்று டி.டி.வி தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
மூன்றாவது கட்டமாக நேற்று புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது மக்களின் பிரச்னைகளை விரைவில் தீர்ப்பதாக உறுதி அளித்தார்.
போராடிக்கொண்டே இருப்பேன்
இதுகுறித்து தினகரன் பேசுகையில், உங்களில் ஒருவனாகத் தான் என்னை சட்டசபைக்கு அனுப்பி வைத்து உள்ளீர்கள். எனவே, நமது தொகுதி தேவைகளை அரசிடம் போராடிப் பெற்றுத் தருவேன். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியில் குறைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. சட்டசபை உறுப்பினர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். இதை நான் ஏற்கவில்லை.
மக்களின் துயரம் அதிகரிப்பு
பேருந்து ஊழியர்கள் போராடிய போது அமைதியாக இருந்துவிட்டு, சட்டசபை உறுப்பினர்கள் கேட்காமலேயே ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பேருந்து கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாமானியர்கள் பாதிப்பார்கள் என்கிற கவலை அரசிடம் இல்லை. அதுபோல, விலை வாசி உயர்வை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் இந்த அரசால் மிகுந்த துயரம் அடைந்து உள்ளனர்.
தகுதியில்லாத முதல்வர்
மற்ற வேலைகளை விடுத்து அமைச்சர்கள் என்னை தரக்குறைவாக ஒருமையில் பேசி வருகிறார்கள். இது அவர்களின் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. அமைச்சர் பதவி எதோ வானளாவிய பதவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதே போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் என்னை ஒருமையில் பேசுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் நாம் வீட்டுக்கு செல்வோம் என்று பேசும் அவர் என்னை குறிப்பிட்டு நான் மாமியார் வீட்டுக்கு செல்வேன் என்கிறார். இது அவரது தகுதிக்கு ஏற்புடையதல்ல.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக, அமைச்சர் ஜெயக்குமார் நான் சிறைக்கு செல்வேன் என்று என்னைப் பற்றி பேசி வருகிறார். அவர் இதற்கு முன்பு பேசும்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எனக்கு டெபாசிட் கிடைக்காது என்றார். தேர்தலுக்கு பிறகு மக்கள் குக்கரைதூக்கி பழைய இரும்பு கடைக்கு போடுவார்கள் என்றார். இது எல்லாம் சரியான பேச்சு அல்ல. நிச்சயம் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வரும். இவர்கள் தான் பழைய இரும்பு கடைக்கு போவார்கள். அதற்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று தினகரன் பேசினார்.