இதற்குப் பெயர் இணைப்பல்ல... பதவிக்காகப் போடப்பட்ட வணிக ஒப்பந்தம்! - டிடிவி தினகரன்
Recommended Video
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு என்பது போலியானது. பதவிக்காகப் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தலைமையிலான இரு அணிகளும் நேற்று இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வணிக உடன்படிக்கை
தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.
துரோகம்
1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, ஜெயலலிதா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்
மன்னிக்க மாட்டார்கள்
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் பன்னீர் செல்வத்தையும் பின் பழனிச்சாமியையும் முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள்
இரட்டை இலை
இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள், இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?
தொடரும்
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படித்தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும்.
துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை ஆளுநரை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.