டிடிவி தினகரன் கட்சி அலுவலகம் வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது - நாஞ்சில் சம்பத்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு டிடிவி தினகரன் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று அதிமுகவின் அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அதிமுக அலுவலகத்திற்கு வருவதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அணிகள் இணைய தினகரன் கொடுத்த கெடு இன்றோடு முடிவடைகிறது. இதனையடுத்து தினகரனை அவரது வீட்டில் ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
தினகரன் உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றி பேசியதாக கூறினார்.
திரண்டு வரும் ஆதரவாளர்கள்
எட்டுதிசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தினகரனைக் காண வந்து கொண்டு இருக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று தினகரன் ஆலோசித்து வருகிறார். தொண்டர்களின் மனம் அறிந்து தினகரன் தனது செயல்பாடுகளை முன்னெடுப்பார்.
கட்சி அலுவலகம் வருவார்
டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்துக்கு கண்டிப்பாக வருவார் அதனை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அதை தடுக்கும் உரிமையும் யாருக்கும் கிடையாது.
பொன் மாலை பொழுது
டிடிவி தினகரன் எப்போது கட்சி அலுவலகம் வருவார் என்று கேட்டதற்கு, ஒரு பொன் மாலை பொழுதில் நிச்சயம் கட்சி அலுவலகம் வருவார் என்று கூறினார். நேற்று சூரிய உதயத்தில் வருவார் என்று கூறிய நாஞ்சில் சம்பத், இன்று பொன் மாலை பொழுதில் தினகரன் வருவார் என்று கூறினார்.
அனைத்து அதிகாரமும் உள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அனைத்து உரிமைகளும் டிடிவி தினகரனுக்கு உள்ளது என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
பொதுச்செயலாளர்
பொதுச்செயலாளர் யார் என்று முடிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாக சம்பத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தேர்தல் ஆணையமே எல்லாவற்றையும் முடிவு செய்து விட முடியாது என்றார். கட்சியிலிருந்து நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் பொதுச்செயலாளருக்கே உரிமை உள்ளது என்று கூறினார்.