திகார் சிறையிலிருந்து வெளியே வந்ததும், பெங்களூர் சிறைக்கு செல்கிறார் டிடிவி தினகரன்! ஏன் தெரியுமா?
ஜாமினில் வெளியே வந்த சூட்டோடு டிடிவி தினகரன் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பறந்து செடலல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: 35 நாட்களுக்குப் பின்னர் டெல்லி திஹார் சிறையில் இருந்து வெளிவரும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதலில் சசிகலாவைத் தான் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியினர் மத்தியில் குறைந்த செல்வாக்கு...செல்வாக்கை தூக்கி நிறுத்த இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்...நெருக்கடி கொடுத்த டெல்லி போலீஸ்...35 மணி நேர விசாரணை...35 நாள் சிறைவாசம் என கடந்த 2 மாதங்கள் மேலாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு போதாத காலம் என்றே சொல்லலாம்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக புரோக்கரும், பேரம் பேசியவரும் கைது செய்யப்பட்ட நிலையில் பேரம் பேசப்பட்ட அதிகாரி யார்? என்ற கேள்விக்கு டெல்லி போலீசாரிடம் பதில் இல்லை, இதையே சாதகமாக்கி 4 முறை இழுபறிகளுக்குப் பிறகு ஜாமினைப் பெற்றுள்ளார் டிடிவி. தினகரன்.
வேகம் காட்டும் வக்கீல்கள்
டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றம் நிபந்தனையுடன் அளித்த ஜாமின் ஆவணங்களை படு ஸ்பீடாக சிறைத்துறையிடம் சேர்த்துள்ளது தினகரன் தரப்பு வழக்கறிஞர் பிரிவு. இதற்குக் காரணம் நடைமுறைகளை முடித்துக் கொண்டு இன்றே தினகரன் வெளியே வருவார் என கூறப்படுகிறது.
பெங்களூர் பிளான்
டெல்லியில் இருந்து சென்னை வரும் தினகரன் மாலையிலேயே பெங்களூர் பறப்பதற்கான விமான டிக்கெட்டும் போட்டாகிவிட்டதாகக் கூறுகின்றனர் கட்சியினர். கடந்த முறை சிறை செல்லும் முன்னர் டிடிவி தினகரன் பெங்களூர் சென்ற போது சசிகலா அவரை சந்திக்க மறுத்துவிட்டார்.
தீர்க்கம்
இந்நிலையில் சிறைவாசத்திற்கு பிறகு திரும்பவும் பார்க்கப்போகும் தினகரனை சசி சந்திப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்றோ அல்லது பெங்களூரிலே முகாமிட்டு அத்தையை பார்த்தே தீர வேண்டும் என்ற தீர்க்கமாக உள்ளாராம் டிடிவி.
கட்சிக்காகத் தானே சிறைவாசம்
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன, தாமாகவே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தாலும்கட்சிக்காக நல்லது செய்யப் போய் தானே சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே கட்சியில் தொடர்ந்து செயல்படுவது குறித்து சித்தியிடம் கேட்க உள்ளாராம், மற்றொரு புறம் கட்சியையும், சின்னத்தையும் எந்த அணிக்கு ஒதுக்குவது என்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணை 2 வாரத்தில் நடைபெற உள்ளதால் அதற்காக கட்சியினருக்கு எப்படி கீ கொடுப்பது என்றும் கேட்க உள்ளாராம் டிடிவி.
என்ன செய்வது
இதில் அதிமுக அம்மா அணியும் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இடைப்பட்ட காலகட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் கட்சியில் தான் செயல்படலாமா வேண்டாமா என்பது குறித்து அத்தையிடம் ஆலோசனை கேட்கவே தினகரன் வந்தகையோடு பெங்களூர் புறப்படுவதாக சொல்லப்படுகிறது.
மீண்டும் கோஷ்டிகள் அரசியலா?
எது எப்படியோ கடந்த ஒரு மாதமாக ரஜினி அரசியலாக இருந்த தமிழக களத்தில் மீண்டும் அதிமுக அணிகள் காற்று இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் என்னென்ன காட்சிகள் அரங்கேற உள்ளதோ பொருத்திருந்து பார்ப்போம்.