டிடிவி தினகரனை நெருக்கும் ஃபெரா வழக்கு.. இன்று மீண்டும் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகிறார்.
சென்னை: ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மார்ச் 22ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று மீண்டும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகிறார்.
ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.
மேலும் 'பரணி பீச் ரிசார்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்னிய செலாவணி மோசடி
வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு இன்னொரு வழக்கும் தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்பீல் வழக்கு
இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
20 ஆண்டு விசாரணை
20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.
அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு
தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிபதி மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வக்கீல் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலர்மதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இன்று ஆஜராக உத்தரவு
அதன்படி மார்ச் 22ஆம் தேதி அன்று (நாளை) வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இரட்டை இலை க்ளைமாக்ஸ்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளன. இரட்டை இலை சின்னம் கிடைத்தால்தான் எதிர்காலமே உள்ளது என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சசிகலா அணி வேட்பாளர் தினகரன், கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்பதால் அவர் போட்டியிட முடியுமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று எழும்பூர் கோர்ட்டில் டிடிவி தினகரன் ஆஜராக உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.