அன்று 2 பேர்... இன்று 2000 பேர் - தினகரனை வரவேற்க கூட்டி வரப்பட்ட கூட்டம்
திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த டிடிவி தினகரனை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்பட்டனர்.
சென்னை: டெல்லி திஹார் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று சென்னை வந்த டிடிவி தினகரனை இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சியின் பெயரை மீண்டும் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் 26ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
2 பேர் சந்திப்பு
27ஆம் தேதி விசாரணைக்காக தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட போது விமான நிலையத்திற்கு அதிமுகவில் பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநில பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். மற்றொருவர் கர்நாடாக மாநில அதிமுக செயலாளரான புகழேந்தி .
தினகரனுக்கு ஜாமீன்
இந்த வழக்கில் தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, இருவருக்கும் தலா 2 பேர் ரூ.5 லட்சத்துக்கான உத்தரவாதத்தினை வழங்கி, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தார்.
திஹாரில் இருந்து விடுதலை
நேற்று இரவு 9.30 மணிக்கு டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை எம்பிக்கள் வேணுகோபால், செஞ்சி ஏழுமலை, எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி வரவேற்றனர். நேற்றிரவு டெல்லி விமானநிலையம் அருகில் உள்ள ஓட்டலில் தங்கினார்.
சென்னை வருகை
இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த தினகரனை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். டிடிவி தினகரன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது அதிமுக அம்மா அணியினர் வாழ்க முழக்கமிட்டனர்.
அடையாறில் கூட்டம்
தினகரன் வீட்டின் அருகே நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொண்டர்கள் குவிந்திருந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவரும் தினகரனை வரவேற்றும் நீதிபதிக்கு நன்றி கூறியும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
குவிக்கப்பட்ட கூட்டம்
டிடிவி தினகரனை விசாரணைக்கு அழைத்து வந்த போது அன்று 2 பேர் மட்டுமே விமான நிலையம் வந்தனர். இன்று 2000 பேர்வரை குவிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ பயணிகள்தான்.