அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் முதல் புன்னகை வேந்தர் வரை... தினகரனின் கதை இது!
அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக அவசரமாக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் இன்று நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கடந்த காலங்களில் டி.டி.வி. என அ.தி.மு.கவினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர் தினகரன். இன்றைக்கு அவரது ஆதரவாளர்களால் புன்னகை வேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியின் மூத்த மகன் தினகரன். பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என மாறினார்.
இவருக்கு பாஸ்கரன், சுதாகரன் ஆகிய இரண்டு தம்பிகள் உள்ளனர். தனது சொந்த மாமன் மகள் அனுராதாவை, ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி அனுராதா ஜெயாடிவியை நிர்வாகம் செய்தார்.
போயஸ்தோட்ட செல்லப்பிள்ளை
தேர்தல் சுற்றுப்பயணக் காலத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பாளராக போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்தார். செல்லப்பிள்ளையாக வலம் வந்தார். அதிமுகவின் மிக முக்கிய பதவியான பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டது.
மக்கள் செல்வன்
1999ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார், இதனையடுத்து ராஜ்யசபா எம்.பியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பெரியகுளம் மக்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டார்.
கட்டம் கட்டிய ஜெயலலிதா
2011ல் கட்சியில் இருந்து சசிகலா உறவினர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியபோது தினகரனும் தப்பவில்லை. அதன்பின் அரசியலில் இருந்து முற்றிலும் விலகியே இருந்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை போயஸ்கார்டன் பக்கம்கூட அவர் வரவில்லை. 1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா அப்போது மீண்டும் நேரடி அரசியலுக்கு வந்தார் டிடிவி தினகரன். ஆட்சி அமைக்க ஆளுநரை சசிகலா சந்தித்தபோதும், பின் எடப்பாடி பழனிச்சாமி சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் அவர்களுடன் டிடிவி தினகரன்தான் அருகில் நின்று கொண்டிருந்தார்.
துணை பொதுச்செயலாளர்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்ற நாளில் அதாவது பிப்ரவரி 15ஆம் தேதியன்று தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
முதல்வர் கனவு
துணைப் பொதுச்செயலாளராக கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஆட்சியில் அமரவேண்டும் என்ற கனவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். ஆனால் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
விலக்கி வைத்த அமைச்சர்கள்
அதிமுக இணைப்பு முயற்சியில் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறினார்கள். அதே நேரத்தில் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டதாக தானாக அறிவித்தார் தினகரன். டுவிட்டரிலும் நன்றி சொன்னார்.
கைதும் சிறையும்
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் டிடிவி தினகரன். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கட்சியில் வேகம்
திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருந்து விட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் கட்சியில் அதிரடியை கிளப்பி வருகிறார். நிர்வாகிகள் பலரை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்கள் பலரை நியமனம் செய்தார்.
Recommended Video
எதிர்ப்பு அதிகரிப்பு
கட்சி, ஆட்சியை தனது வசப்படுத்த நினைத்த டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு வலுத்தது. ஆனால் தனது பேச்சை கேட்காதவர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறினார் டிடிவி தினகரன். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பொதுக்குழு கூடி டிடிவி தினகரனை சசிகலா நியமித்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.