ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது... ஈவிகேஎஸ் இளங்கோவன் 'பொளேர்'
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவை :ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் குற்றவாளியான டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் வென்றாலும் தோற்றாலும் நிச்சயமாக ஜெயிலுக்குதான் போவார். ஆர்.கே நகர் தொகுதி மக்கள், ஒரு குற்றவாளிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கூறியிருக்கிறார். என்னை பொறுத்தவரையில் அவர் டெபாசிட் வாங்குவதே கடினம் தான்.
ஆர்.கே. நகர் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுகவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழல் உள்ளதாக தான் எனக்கு தெரிகிறது.
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.