ஜெ. இல்லாத வெற்றிடத்தில் கபடி ஆட கமல் நினைக்கிறார்.. டிடிவி தினகரன் காட்டம்
ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தில் கபடி ஆட கமல் நினைக்கிறார் என்று டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தில் கமல்ஹாசன் கபடி ஆட நினைக்கிறார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேர்தலுக்கு முன்பே புகார்கள் எழுந்தன. ஆளுங்கட்சியினர் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்ய இலக்கு நிர்ணயித்து இரவுப் பகலாக விநியோகம் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தினகரன் அணியினரும் ஹவாலா முறையில் ரூ. 20 நோட்டை டோக்கனாக வாக்காளர்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், அந்த நோட்டில் உள்ள வரிசை எண்ணை கூறினால் ஒரு வோட்டுக்கு ரூ.10000 வரை வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
கமல் காட்டம்
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 6,000 வரை தரப்பட்டது. முதல்வர் முதல் தமிழக அமைச்சர்கள் வரை அனைவரும் கச்சிதமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சுயமாக வளர்ந்த...
அதேபோல் சுயமாக வளர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஒரு வோட்டுக்கு ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்துள்ளார். எனவே அதிக விலை நிர்ணயித்த சுயேச்சை வேட்பாளருக்கே மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துவிட்டனர். ரூ.20 டோக்கனுக்கு ஆர்கே நகர் மக்கள் விலை போய்விட்டனர்.
திருடனிடம் பிச்சை
ரூ.20 டோக்கனுக்கு மக்கள் விலை போயுள்ளது, பிச்சை எடுப்பதற்கு சமம், அதுவும் திருடனிடம் பிச்சை எடுக்கும் கேவலம் எங்காவது நடந்ததுண்டா என்று கமல் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
கமல் மன நிலையில் தடுமாற்றம்
இதுகுறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறுகையில்,
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என கமல் நினைக்கிறார். கமல் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.