புதிய கட்சி முனைப்பில் தினகரன்... ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை!
சுயேச்சை எம்எல்ஏ தினகரன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : குக்கர் சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக தினகரன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆர்கே நகர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்து டிடிவி. தினகரன் அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்ற குஷியில் இருந்தார். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டனர். தினகரனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எனினும் டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், 6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும் என்று சொல்லி வருகிறார். அதோடு அதிமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல் இருப்பதாகவும் தொடர்ந்து சொல்லி வந்தார், ஆனால் எதிர் அணியில் இருந்து பிரபு எம்எல்ஏ தவிர யாரும் இதுவரை தினகரன் அணிக்கு வரவில்லை.
குக்கர்சின்னம் ஒதுக்கிய நீதிமன்றம்
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தனக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்திடம் பெயர்கள் அளிப்பு
மேலும் தினகரன் கோரும் பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனது கட்சியின் பெயர்களாக 3 பெயர்களை தினகரன் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளார்.
3 வாரத்தில் முடிவு செய்ய உத்தரவு
அனைத்து இந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற 3 பெயர்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். 3 வாரத்தில் எந்த பெயரை தினகரனுக்கு ஒதுக்குவது என்று ஆணையம் இறுதி முடிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
புதிய கட்சி ஆலோசனை
இதனைத் தொடர்ந்து டிடிவி. தினகரன் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் டிடிவி. தினகரன் உள்ள நிலையில், புதிய கட்சிக்கு ஆதரவு இல்லை என்று வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.