உங்கள் வீட்டு பிள்ளையாக உழைப்பேன்.. ஆர்.கே.நகரில் தினகரன் பேச்சு
உங்கள் வீட்டு பிள்ளையாக உங்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உழைப்பேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: உங்கள் வீட்டு பிள்ளையாக உழைப்பேன் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்களாக டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், மதிவாணன், லோகநாதன், கங்கை அமரன், கலைக்கோட்டுதயம், தீபா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
அதிமுக பிளவுபட்டு இரு அணிகளாக போட்டியிடுவதால் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உள்ளது. அதேநேரத்தில் இரு அணிகளின் அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்து வெற்றி கனியை பறிக்க திமுக தரப்பும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். வழக்கம்போலவே கோவில் வழிபாட்டை அவர் கடைபிடித்தார். கிராஸ் ரோடு பூங்கா அருகே உள்ள கேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர், திறந்த ஜீப்பில் தொப்பி சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடையே பேசிய தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தான் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு ஏற்றார். அ.தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மிகப்பெரிய பதிவு இருக்கிறது. ஜெயலலிதா தொகுதி என்ற அந்தஸ்தை பெற்ற இங்கு, அவர் விட்டுச்சென்ற பணிகளை, கடமைகளை நிறைவேற்ற வேட்பாளராக நான் களமிறங்கி இருக்கிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றி காட்டுவேன். மக்கள் பணிகளுக்கு என்றும் முக்கியத்துவம் கொடுப்பேன். உங்கள் வீட்டு பிள்ளையாக உங்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உழைப்பேன். எனவே எனக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து என்னை உங்கள் பிரதிநிதியாக நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.