புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு ஏன்? டிடிவி தினகரன் அடடே விளக்கம்!
புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தார். அதன்படி அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர்களாக எஸ்.டி.ஜக்கையன், மேலூர் ஆர்.சாமி, சி.சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அம்மா அணியின் அமைப்புச் செயலாளர்களாக செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம் எனக் கூறினார்.
இதன்காரணமாகவே கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் தேவைப்படும் பொழுது எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை கழகத்திற்கு செல்வேன் என்றும் அவர் கூறினார்.