ஃபெரா... பீச் ரிசார்ட் வழக்கு - டிடிவி தினகரனை சுற்றும் வழக்குகள்
அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் மீது ஃபெரா முதல் பல வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.
சென்னை: அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடங்கி பரணி பீச் ரிசார்ட் வழக்கு வரை டிடிவி தினகரன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்தாலும் அவர் மீது பல வழக்குகள் உள்ளன. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றங்களில் டி.டி.வி.தினகரன் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எந்தெந்த வழக்குகள் நெருக்கடி கொடுக்க தயாராக இருக்கின்றன என்று தெரிந்து கொள்வோம்.
அந்நிய செலாவணி மோசடி
தினகரன் பெயரில் 1995-96ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள பார்கிலே பேங்கில் 72 கோடி வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. அதனையடுத்து தினகரன் மீது 1996ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது.
ரூ.28 கோடி அபராதம்
இந்த வழக்கில் அமலாக்கத்துறை 32 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேல் முறையீட்டில் அது 28 கோடி ரூபாயாக குறைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் 28 கோடி ரூபாய் அபராதத் தொகை விதித்தது சரிதான் என்று கூறி ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
ஜெ. ஜெ. டிவி
1990களில் அப்போதய ஜெ ஜெ டிவிக்கு அப்லிங்க் கருவிகளை வாங்கிய வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஜெஜெ டிவிக்கு, அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தவும், கருவி களை வாடகைக்கு எடுத்ததிலும், அன்னிய செலாவணி விதிகளை மீறியதாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
டாலர்கள் மாற்றிய வழக்கு
வெளிநாட்டு நிறுவனங்களான ரிம்சாட், சுபிக்பே ஆகிய கம்பெனிகளுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகவும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு 10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை மாற்றியதாக அமலாக்கப்பிரிவு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பரணி பீச் ரிசார்ட்ஸ் வழக்கு
இந்தியன் வங்கியில் ரூ 3 கோடி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கடன் வாங்கினர். இந்த பணம்தான் கொடநாடு வாங்க பயன்படுத்தப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கொடநாடு எஸ்டேட்
வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில் 2.20 கோடி ரூபாயை எடுத்து கொடநாடு எஸ்டேட் வாங்க சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாகவும், அமலாக்கத் துறை வழக்கு தொடுத்தது.
தப்புவாரா டிடிவி தினகரன்
1996ல் இருந்து 2002 வரை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால், விரைந்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை விரைந்து முடிக்கும்படி மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் பட்சத்தில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகும் என்பது உறுதியாகிறது.