ஜெயலலிதா சமாதியில் தடுமாறி விழப்போன தினகரன்... தாங்கி பிடித்த கலைராஜன்
ஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தினகரன் தடுமாறி விழப்போனார்.
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த டிடிவி தினகரன் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தடுமாறி விழப்போனார். அவரை கலைராஜன் தாங்கிப் பிடித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காலையில் முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் பேரணி நடைபெற்றது. கறுப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினர். உறுதிமொழி எடுத்தனர்.
திறந்த வேனில் தினகரன்
ஆளும் கட்சி அளவிற்கு இல்லாவிட்டாலும், தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை நோக்கி திறந்த வேனில் பேரணியாக சென்றார். இதனால் அண்ணாசாலை, வாலாஜா சாலை போக்குவரத்து நெரிசலில் திணறியது.
தாங்கிப் பிடித்த கலைராஜன்
தினகரன் ஆதரவாளர்களின் கூட்டம் அதிகரிக்கவே அனைவரும் நினைவிடத்திற்குள் விட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காவல்துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் வந்தார். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவே தினகரன் தடுமாறினார். அவரை கலைராஜன் தாங்கிப் பிடித்தார். ஒரு ஆதரவாளர் கீழே விழுந்தார்.
பின்தங்கிய செந்தில் பாலாஜி
தினகரனுடன் அருகில் நின்று ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்துவது யார் என்பதுதான் பலருக்கும் ஆர்வமாக இருக்கிறது. இதில் பின்னால் இருந்து முன்னாடி வந்தார் தங்க தமிழ் செல்வன். ஆனால் செந்தில் பாலாஜி எம்எல்ஏ பின்தங்கி விட்டார்.
நெரிசலில் சிக்கிய சென்னைவாசிகள்
ஜெயலலிதா நினைவு தினமான இன்று காலை முதலே மெரீனா கடற்கரை சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முதல்வர் துணைமுதல்வர் பேரணி வந்தபோது அண்ணாசாலை, வாலாஜா சாலை தடுமாறியது. பிற்பகலில் தினகரன் பேரணி வந்த போதும் போக்குவரத்து நெரிசலில் சென்னைவாசிகள் சிக்கி தவித்தனர்.