திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை இரண்டாக பிரித்து மா.செ.க்களை நியமித்தார் தினகரன்
திண்டுக்கல் மாவட்ட அ.இ.தி.மு.கவை இரண்டாகப் பிரித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ. தங்கதுரையை நியமனம் செய்து டி.டி.வி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை: திண்டுக்கல் மாவட்ட அ.இ.தி.மு.கவை இரண்டாகப் பிரித்து, திண்டுக்கல் அ.இ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ. தங்கதுரையை நியமனம் செய்து டி.டி.வி. தினகரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுவரை திண்டுக்கல் மாவட்ட அ.இ.தி.மு.க. என்று இருந்ததை டி.டி.வி. தினகரன் 'திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ' என்று இரண்டாகப் பிரித்துள்ளார். அதன்படி திண்டுக்கல் அ.இ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ. தங்கதுரையை நியமனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த வி. மருதராஜ் அந்தப் பொறுப்பிலிருந்து விடுக்கவிக்கப்படுகிறார் என, தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) மருத்துவ அணித்தலைவர் பொறுப்பில் உள்ள டாக்டர் எஸ். முத்தையா எம்.எல்.ஏ., செயலாளர் பொறுப்பில் உள்ள டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி., இணைச் செயலாளர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் கே. கதிர்காமு, எம்.எல்.ஏ. ஆகியோரை, தினகரன் நீக்கியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. (அம்மா) மருத்துவ அணித்தலைவர் பொறுப்பிற்கு டாக்டர் கே. கதிர்காமு எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ அணி செயலாளராக பரமக்குடி டாக்டர் எஸ்.முத்தையா எம்.டி. எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக எம்.எல்.ஏ தங்கதுரை நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக கே.பி. நல்லசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுக்க அ.இ.அ.தி.மு.க. அமைப்புகளில் தனது ஆதரவாளர்களை நியமித்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்து வருகிறார் தினகரன். இதனால் அடுத்தக்கட்ட பரபரப்பை நோக்கிச் செல்கிறது அ.இ.அ.தி.மு.க. என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.