வடசென்னையில் ஆக.23ல் நடக்க இருந்த தினகரன் தலைமையிலான பொதுக்கூட்டம்...திடீர் ஒத்திவைப்பு!
தினகரன் தலைமையில் நாளை மறுதினம் வடசென்னையில் நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : டிடிவி. தினகரனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 23ம் தேதி வடசென்னையில் நடைபெற இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர் வி.பி.கலைராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகியிருந்த டிடிவி. தினகரன் கட்சியில் மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையில் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 14ம் தேதி மதுரை மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு முன்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் தொண்டர்களின் கூட்டம் திணறிப்போய்விட்டது.
மற்றொருபுறம் இந்த கூட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை, எனினும் நீதிமன்றத்தை நாடி அனுமதி வாங்கி மேலூர் கூட்டத்தை தினகரன் அணியினர் நடத்தினர். இந்நிலையில் நாளை மறுதினம் வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் தினகரன் அதிரடியாக முடிவுகளை அறிவிக்க உள்ளார் என்று நாஞ்சில் சம்பத் கூறி வந்தார். தேனை மொய்க்கும் ஈக்களை போல நிச்சயம் தொண்டர்படை கூடும் என்றெல்லாம் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.
ஆனால் அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்புகள் வந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சியில் பொறுப்பு, ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி என்று அரசியல் களம் தலைகீழாகிவிட்டது. இந்நிலையில் டிடிவி. தினகரனுக்கு உடல்நலம் சரியில்லாததால் நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக தினகரன் ஆதரவாளர் வி.பி.கலைராஜன் கூறியுள்ளார்.