தினகரன்தான் தமிழகத்தின் முதல்வர்.. சசியை சந்திக்க அனுமதி மறுத்ததால் மிரட்டிய ஆதரவாளர்கள்!
சசிகலாவை சந்திக்க தினகரனுகக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சசிகலாவை சந்திக்க அனுமதி மறுத்த சிறை அதிகாரிகளிடம் தினகரன் தான் தமிழகத்தின் முதல்வர் என அவரது ஆதரவாளர்கள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு டிடிவி தினகரன் நேற்று சென்றார்.அப்போது சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டருக்கு முன்பே டிடிவி தினகரனின் கார் நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
நிறுத்தப்பட்ட கார்
கார் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சிறை வளாகம் உள்ளே அவர் நடந்து சென்றார். இதுநாள் வரையில் சிறை வளாகத்துக்குள் காரில் தினகரன் சென்று வந்தார்.
சசியை சந்திக்க அனுமதி மறுப்பு
இந்நிலையில் நேற்று முதல்முறையாக நடந்து சென்றார். மேலும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
நேரம் தவறியதால்..
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரைதான் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் தினகரன் நேரம் தவறி சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினகரன் தமிழகத்தின் முதல்வர்
ஆனால் இதனை ஏற்க மறுத்த தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் தினகரன்தான் தமிழகத்தின் முதல்வர் எனக்கூறினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.