சிரித்த முகம் மிஸ்சிங்.. பத்திரிகையாளர்களிடம் கோபத்தில் சீறிய டிடிவி தினகரன்!
Recommended Video
சென்னை: பத்திரிகையாளர்கள் பேட்டியில் பொறுமை இழந்த நிலையில் காணப்பட்டார் டிடிவி தினகரன்.
வழக்கமாக சிரித்த முகத்தோடு பேட்டியளிக்கும் தினகரன், இன்று தனது இல்லத்தில் கோபத்தோடு பேட்டியளித்தார். அவர் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சாடுவதிலேயே குறியாக இருந்தார்.
எம்எல்ஏ பழனியப்பன் கைது செய்யப்பட்டுவிட்டதாக சில டிவி சேனல்களில் செய்தி வெளியானதை சுட்டிக் காட்டிய தினகரன், "இப்படிப்பட்ட செய்திகளை எங்களிடம் செக் செய்துவிட்டு ஒளிபரப்புங்கள். பரபரப்புக்காக எதையும் போட்டுவிட கூடாது. உங்களுக்கும், அண்ணன், தம்பிகள் உள்ளனர். பெற்றோர் வயிற்றில்தான் பிறந்துள்ளீர்கள். அவர்களுக்கு இப்படி நெருக்கடி ஏற்பட்டால் நீங்கள் இப்படித்தான் செய்திகள் போடுவீர்களா"? என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.
கைது இல்லை
மேலும், பழனியப்பன் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டதாக தகவலே இல்லை என்றும், இதுகுறித்து சிபிசிஐடி போலீசில் நீங்கள் விசாரித்தீர்களா என்றும் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஆங்கில கேள்வி
மற்றொரு நிருபர் ஆங்கிலத்தில், "உங்களுக்கு ஆதரவாக எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர்" என்று கேள்வி எழுப்பினார். இதனால் உச்சகட்ட கோபத்திற்கு போனார் தினகரன். ஏன், உங்களுக்கு தெரியாதா? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். குடகில் எத்தனை பேர் உள்ளனர் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.
ஊருக்கே தெரியும்
21 எம்எல்ஏக்கள் குடகில் உள்ளனர் என்பது உலகத்திற்கே தெரியும். விடிய விடிய ராமாயண கதை கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்வதை போல உள்ளது உங்கள் கேள்வி. ஆட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இல்லை. அதை மட்டும் நீங்கள் பாருங்கள்.
சாதாரண ஆள்தான்
ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பெரிய ஆள் கிடையாது. நீங்களும் என்னை போன்றும், எல்லோரை போன்றும் சாதாரண மனிதர்தான். நான் எனது எம்எல்ஏக்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று முக்கிய குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் வேறு ஏதோ கேள்விகளை கேட்டு திசைதிருப்புகிறீர்கள். டிவி சேனல்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும். இவ்வாறு பொரிந்து தள்ளிவிட்டார் தினகரன்.
கோபத்தில் தினகரன்
சிரித்த முகத்தோடு எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து வரும் வழக்கம் உள்ள தினகரன், நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம், மற்றும் எடப்பாடி அணியின் அதிரடிகளால் கோபத்தின் உச்சியில் உள்ளார். அதை நிருபர்களிடம் காண்பித்து வருகிறார் என்றே தெரிகிறது.