மூக்குப்பொடி சித்தரை நாடி ஓடிய தினகரன்... ஏன்?
மூக்குப்பொடி சித்தரை சந்தித்து தினகரன் ஆசி பெற்றார்.
திருவண்ணாமலை: இடைத்தேர்தல்கள், திமுக-அதிமுக கூட்டங்கள், என அரசியல் களம் பரபரப்பான சூட்டில் இருக்க, டிடிவி தினகரனோ, திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி வாங்கி வந்திருக்கிறார்.
இந்த மூக்குப்பொடி சித்தர் யார்? இவரது பெயர் இதுவரை யாருக்குமே தெரியாது. வயது 90-க்குமேல் ஆகிறது. இவருக்கென்று நிரந்தரமான இடம் என்று ஒன்று இல்லை. அடிக்கடி திருவண்ணாமலை கிரிவல பாதையில் தென்படுவார். எப்பவுமே மூக்குப்பொடி போட்டுக் கொள்வார். மூக்குப் பொடி சித்தர் எவ்வளவுதான் ஃபேமஸ் ஆனாலும், பொன், பொருள் மீதெல்லாம் ஆசை கிடையாது.
தீவிர பக்தர்கள்
எந்த வசதியையும் விரும்ப மாட்டார். இவரை பார்த்து ஆசி பெறுவதற்காக பெரிய பெரிய விஐபிக்கள் தட்டில் பணக்கட்டுடன் காத்து கிடந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார். இவர் கண்களை திறந்தாலே ஆசிதான், கையை தூக்கினாலும் ஆசிதான், திட்டினாலும் ஆசிதான்.. இன்னும் பல வித்தியாச, அரிதான குணங்களை உடைய இந்த மூக்குப்பொடி சித்தருக்கு புதுச்சேரி ரங்கசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இவரது தீவிர பக்தர்கள்.
ஆசி பெறும் டிடிவி
டிடிவி தினகரன் இவரை அடிக்கடி சந்தித்து ஆசி பெற்று வருவார். எடப்பாடி பழனிசாமியும்-தினகரன் இடையே பிளவு ஏற்பட்டு கிடந்தபோதுகூட இவரிடம் வந்துதான் தினகரன் ஆசி பெற்று சென்றார். இந்நிலையில் மூக்குப்பொடி சித்தர் தற்போது கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்ரி ஆஸ்ரமத்தில் சில காலம் தங்கியிருக்கிறார்.
தியானத்தில் தினகரன்
அவரை நேற்று தினகரன் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். காரணம் நேற்று பவுர்ணமி தினம் ஆகும். அவரிடம் தினகரன், ஆசி பெற்றதுடன், மேலும், தரையில் கால் மீது கால் போட்டபடி படுத்திருக்கும் மூக்குப்பொடி சித்தரின் அருகில் அமர்ந்து, சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கு?
18 எம்எல்ஏக்களின் தீர்ப்பு இன்னமும் இழுபறியாகவே உள்ளது. அதற்கு ஒரு முடிவும் கிடைக்காமல் தாமதமாகி கொண்டே வருகிறது. இந்தநிலையில், வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக வருவதற்காகக்கூட தினகரன் சித்தரை சந்தித்து ஆசி பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.