ஆப்பு ரெடி.. தினகரன் வேட்புமனு தள்ளுபடி?- தேர்தல் ஆணையத்தின் அடுத்த திட்டம்
Recommended Video
சென்னை: தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களில் சென்ற புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
' தேர்தல் நடத்தும் அதிகாரியே புகார் கொடுத்துள்ளதால், தினகரனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதற்கு வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராகத் தனித்துப் போட்டியிடுகிறார் டி.டி.வி.தினகரன். மீண்டும் தொப்பி சின்னத்தைக் கேட்டு தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்திருக்கிறார்.
தொப்பிக்கு சிக்கல்
'ஆர்.கே.நகரில் போட்டியிடும் சுயேச்சைகளில் மூன்று பேர் தொப்பி சின்னத்தைக் கேட்டுள்ளனர்' எனப் பற்ற வைத்த ஓ.பி.எஸ் தரப்பு. இருப்பினும், தொப்பி சின்னத்திலேயே களம் இறங்க வேண்டும் என்பதில் தினகரன் தரப்பினர் உறுதியாக உள்ளனர்.
பிரமாண்ட பேரணி
நேற்று மதியம் 1 மணியளவில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார் தினகரன். சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டு வந்தனர் தினகரன் ஆதரவாளர்கள். வழிநெடுகிலும் ஏராளமானோரைத் திரட்டி, தினகரனுக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்தச் செயல் அமைச்சர்கள் தரப்பை மிரள வைத்தது.
தேர்தல் அதிகாரி புகார்
இந்நிலையில், இன்று காலை தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி. அவரது புகாரில், ' விதிகளை மீறி அதிக வாகனங்களில் தினகரன் ஆட்கள் வந்திருந்தனர். இதன்பேரில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
பலத்தை காட்டிய தினகரன்
இந்தத் தகவல் தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " வேட்புமனுத் தாக்கலுக்கு அனுமதி கேட்டபோதே, அதிக வாகனங்களில் வரக் கூடாது என்பதை உத்தரவாகக் கூறியிருந்தனர் அதிகாரிகள். அதையும் மீறி தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக ஆட்களோடு வந்திருந்தார் தினகரன். இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி எதிர்பார்க்கவில்லை.
வேட்புமனு தள்ளுபடி
இதைப் பற்றி அமைச்சர்கள் சிலரும் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் நினைத்தால், இதன் அடிப்படையிலேயே தினகரனின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யலாம். தனக்கு பதிலாக மாற்று வேட்பாளரை தினகரன் குறிப்பிட்டிருந்தால், அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால், சசிகலா தரப்பினர் போட்டியில் இருந்து பின்வாங்க வேண்டியதுதான்" என்றார் உறுதியாக.
குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை
"ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்து தினகரன் பின்வாங்க வேண்டும் என்பதுதான் ஆள்பவர்களின் விருப்பம். அதற்கேற்ப, பலவிதமான சோதனைகளுக்கு ஆளானாலும் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். அவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி உருவாகிக் கொண்டிருக்கிறது.
குடும்பம் சிதறுகிறது
ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் எண்ணம். அதற்கேற்ப, உளவுத்துறை தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறது. வேட்புமனு பரிசீலனைக்கு முன்பே தேர்தல் அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார். இது தினகரன் தரப்புக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.