சசிகலாவின் அறிவுரையின் படி அமமுகவை காப்பாற்ற தினகரன் புதிய யுக்தி.. ஆதரவாளர்கள் உற்சாகம்
சென்னை: சசிகலாவின் அறிவுரையின்படி அதிருப்தியாளர்கள் வெளியறுவதை தடுக்க அவர்களுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கும் திட்டத்தினை டிடிவி தினகரன் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவை காப்பற்றுவதற்கான தினகரனின் இந்த புதிய யுக்தியால் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் டிடிவி தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த கட்சியைவிட்டு அதன் மூத்த நிர்வாகிகள் விலகி, திமுக மற்றும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதேபோல் அமமுவின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்னசபாபதி, பிரபு உள்ளிட்டோரும் அதிமுகவுக்கு திரும்பி விட்டனர். இதேபோல் அமமுகவின் பல்வேறு நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
தினகரன் அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் கட்சியில் இருந்து அதிருப்தி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க அவர்களுக்கு புதிய பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதானமாக செயல்படுங்கள்
கடந்த 3ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது குறித்து விவாதித்தாக தெரிகிறது. அப்போது சசிகரலா, கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இனி கட்சியை விட்டு யாரும் செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.
தினகரன் திட்டம்
சசிகலாவின் அறிவுரையை ஏற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை மாற்று கட்சிக்கு செல்லவிடாமல் தடுப்பதற்கு அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க டிடிவி.தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பழனியப்பனுக்கு பதவி
இதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு துணைப்பொதுசெயலாளர் பதவியும், சி.ஆர்.சரஸ்வதிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் தினகரன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே கட்சியில் முக்கிய நபர்கள் மேலும் 3 பேருக்கு கட்சியின் துணைப்பொதுசெயலாளர் பதவியை வழங்கவும் தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.