வானிலை மையமும் அரசியல் செய்யுதா.. தினகரன் பொளேர் கேள்வி!
வானிலை ஆய்வு மையம் அரசியல் செய்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: கடைசியில் வானிலை மையமும், அரசியல் செய்கிறதா என்று அமமுக, துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
கரூரில் செந்தில்பாலாஜி நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் தினகரன் திருச்சி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது:
நம்பவே முடியவில்லை
"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். இப்போது அதையும் நம்பமுடியவில்லை. மழையை காரணம் கூறி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
திடீர் ரெட் அலர்ட்
ஆனால் வானிலை மையம் கூறியதுபோல் மழை பெய்யவில்லை. அதற்குள்ளாக மழையை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. வானிலை மையமும், அரசியல் செய்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள்.
நம்பிக்கை குறைகிறது
நேற்று சென்னையில் மழையே இல்லை. அதே போல் இடைதேர்தல் வேண்டும் என கூறும் திமுக தேவையில்லாத வழக்குகளை போட்டிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போகிறது.
பாஜகவுடன் கூட்டணியா?
பாஜகவுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அது தற்கொலைக்கு சமமானது. சசிகலா பரோலில் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.