அடி ஆத்தீ.. எம்புட்டுக் கூட்டம்... ஏர்போர்ட்டை ஸ்தம்பிக்க வைத்த தினகரன் ஆதரவாளர்கள்!
டெல்லியில் இருந்து ஜாமினில் விடுதலையாகி சென்னை வந்த அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு விமான நிலையத்தில் "பயங்கர" வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை : அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜாமினில் வெளியானதையடுத்து சென்னை வந்த அவரை வரவேற்க ஏராளமானோர் திரண்டு விமான நிலையத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்ச பேரம் பேச முயன்று டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் விவரத்தை டெல்லி போலீசார் தெரிவிக்காததை சாதகமாக்கி டிடிவி தினகரன் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில் நேற்று இரவு சிறையில் இருந்து விடுதலையான டிடிவி தினகரன் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பிற்பகல் 12.45 மணியளவில் தினகரன் வந்த போது அவரை வரவேற்பதற்காக ஏராளமான அதிமுகவினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
கைதாகி சிறைக்குப் போய்
தினகரன் லஞ்ச குற்றச்சாட்டில் விசாரணைக்கு சென்ற போதும் சரி, போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வந்து டெல்லிக்கு திரும்பி அழைத்து சென்ற போதும் கட்சியினரும் நிர்வாகிகளும் ஒதுங்கியே இருந்தனர். இந்நிலையில் இன்று விடுதலையாகி வந்த தினகரனை நாஞ்சில் சம்பத், கர்நாடகா அதிமுக அமைப்புச் செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.
பயங்கர வரவேற்பு
விமானத்தில் இறங்கி காரில் ஏறுவதற்காக தினகரன் வந்த போது தொண்டர்கள் மாலைகள் போட்டும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் வெள்ளத்தை நீந்தி தினகரன் தனது காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டார்.
செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தினகரனிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கமுடியவில்லை.
போலீஸ்தான் பாவம்
கருணாநிதி வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க தேசியத் தலைவர்கள் சென்னை வரவுள்ள நிலையில் தினகரனை வரவேற்க கூட்டம் கூடியதால் போலீசார் செய்வதறியாது திகைத்துப் போயினர்.
சூப்பர் ஏற்பாடு
தினகரன் சிறைக்குப் போன பிறகு அதிமுக அம்மா கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் தினகரனை சற்று மறந்து போயிருந்தனர். இப்போது திரும்ப அவர் வெளியில் வந்ததைத் தொடர்ந்து மீண்டும் ஓடி வந்து விட்டனர்.