அசராத தினகரன்.. அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து தம்பிதுரை நீக்கம்!
சென்னை: அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து தம்பிதுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் தினகரன்.
இந்த நிலையில், எடப்பாடி அணியை சேர்ந்த நிர்வாகிகளை கட்சி பொறுப்பிலிருந்து நீக்குவதாக வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.
பொதுக்குழுவில் அதிரடி
இதனால் கோபமடைந்த எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் இணைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, சசிகலா மற்றும், தினகரன் ஆகியோரின் கட்சி பதவிகளை பறிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தம்பிதுரை
இதன்பிறகும், தினகரன் அறிவிப்புகள் தொடரவே செய்கின்றன. இன்று வெளியிட்டுள்ள அறிப்பில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து லோக்சபா எம்.பி. தம்பிதுரை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கதமிழ்ச்செல்வன் நியமனம்
தம்பிதுரை, முதலில் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். பின்னர், எடப்பாடி அணியுடன் ஐக்கியமானார். புதிய கொள்கை பரப்பு செயலாளராக தனது ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வனை நியமித்துள்ளார் தினகரன்.
அமைச்சர் மணியன் பதவி பறிப்பு
அதேபோல நாகை மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நீக்ப்படுவதாக தினகரன்அறிவித்துள்ளார். நாகை தெற்கு மாவட்ட செயலாளராக சந்திரமோகனும், வடக்கு மாவட்ட செயலாளராக செந்தமிழனும், தினகரனால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.