ஜெயலலிதா பேரவையில் இருந்து அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் நீக்கம்.. தினகரன் அதிரடி
ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ஆர். பி. உதயக்குமாரை தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.
சென்னை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், ஜெயலலிதா பேரவையின் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் உள்ள ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெயலலிதா பேரவை செயலாளராக மாரியப்பன் கென்னடியை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
மேலும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா நீக்கப்பட்டுள்ளதாகத் தினகரன் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் இந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பாளர்கள் நீக்கம் மற்றும் நியமனம் குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக அம்மா அமைப்புச் செயலாளராக எம். ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டக் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் என். அழகர்சாமி ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ராஜவர்மன் புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளராக தொடர்ந்து நீடிப்பார்.
விருது நகர் மாவட்ட கழக பொருளாளராக டி. முத்தையா நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக சி. சுப்பிரமணியமும், இணைச் செயலாளராக என். அழகர்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக கே. விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட மகளிர் அணியின் மாவட்டச் செயலாளராக கவிதா தனசேகரனும், மாவட்ட இணைச் செயலாளராக எம். சொர்ணமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீக்கம் மற்றும் நியமனம் அனைத்தும் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது