அடுத்தடுத்து அரசியல் பிரவேசங்கள்.. இன்னும் எத்தனை பேருப்பா இருக்காங்க சசிகலா குடும்பத்தில்?!
சென்னை: சசிகலா குடும்பத்திலிருந்து அடுத்ததாக ஒருவர் கட்சியை ஆரம்பித்து விட்டார்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னாடி, திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேலையை பார்க்க தொடங்கியவர் தினகரன்தான். அப்போது அங்கு சென்றபோதெல்லாம் தொகுதி மக்களிடம் பேசியபோது, 2 தொகுதிகளையும் அமமுகதான் கைப்பற்றும் என்றார். ஆனாலும் உள்ளுக்குள் தினகரனுக்கு ஒரு உதறல் உள்ளது.
"திருப்பரங்குன்றம் தனக்கு நெருங்கிய தொகுதி. அதனால் அதைப்பற்றி பயமில்லை, ஆனால் திருவாரூரில் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே கவனம் செலுத்தவேண்டும், அப்போதான் திவாகரனின் அரசியல் ஆட்டத்தை அடக்க முடியும்" என்று நிர்வாகிகளிடம் தினகரன் ஏற்கனவே கூறி வந்தாராம்.
திவாகரன் சபதம்
ஏனென்றால், திருவாரூரில் அ.ம.மு.க-வை டெபாசிட் இழக்க வைப்பதே "அண்ணா திராவிடர் கழக"த்தின் ஒரே சபதமாம். இந்த கட்சிக்கு திவாகரன்தான் பொதுச்செயலாளர் ஆவார். அதற்காக ஒரு வேட்பாளரை இறக்கி தீவிர தேர்தல் வேலையிலும் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அது போக பிரச்சாரத்துக்கு நாஞ்சில் சம்பத்தை திவாகரன் கூட்டி வரப்போகிறாராம். அதனால் திவாகரனை தோற்கடிக்க வேண்டும் என்று தினகரனும், தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்று திவாகரனும் கங்கணம் கட்டிக் கொண்டு சபதம் மேல் சபதம் போட்டு வருகின்றனர்.
கூலிங்கிளாஸ் பாஸ்கரன்
இந்த சண்டை எப்போ ஓயுமோ, இவர்கள் இருவரால் தேர்தல் களங்கள் என்ன ஆகுமோன்னு தெரியல. அதுக்குள்ள இன்னொருத்தர் நான் மட்டும் என்ன சும்மாவா? என்று ரெண்டு பேருக்கு நடுவில் புயலென புகுந்து வந்துள்ளார். அவர்தான் பாஸ்கரன். இவரும் சசி குடும்பத்துக்காரர்தான். ஆரம்பத்திலிருந்தே இவர் ஒரு தனி தினுசுதான். திடீரென தானே நடித்து படங்களை வெளியிடுவார். திடீரென்று காணாமல் போவார். பிறகு பிறந்தநாள் அன்றைக்கு "கூலிங்கிளாஸ் பாஸ்கரனின்" கட்அவுட்கள், பேனர்கள் ஊரெல்லாம் நின்று கொண்டிருக்கும்.
எம்ஜிஆர் தொண்டர்கள்
பிறகு ஆந்திராவில் குவாரி தொழிலில், பிசியாகிவிடுவார். கொஞ்ச நாள் கழித்து எம்ஜிஆர் பெயரில் நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு போவார். இப்போது கட்சியும் ஆரம்பித்துள்ளார். மற்றவர்களை போலவே பாஸ்கரனும், எம்ஜிஆரை கட்சி, கொடி, கொள்கைக்குள் கொண்டுவந்துவிட்டார். எம்ஜிஆர் தொண்டர்களை ஓன்று சேர்த்து வழிநடத்த போவதாக கூறியிருக்கிறார். எம்ஜிஆர் தொண்டர்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும் என்று தெரியாது.
காய் நகர்த்துகிறார்
எம்ஜிஆருடன் ஒன்றாக பாடுபட்டு நெருங்கி பழகி வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம் வீரப்பன், திருநாவுக்கரசர், ஹண்டே உள்ளிட்டவர்கள் இருந்தும் இவர்களுக்கெல்லாம் தோன்றாத ஒரு விஷயம் பாஸ்கரனுக்கு தோன்ற என்ன காரணம் என்று தெரியாது. ஆனாலும் எம்ஜிஆர் விசுவாசிபோல காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் மோடியை முன்நிறுத்தி பேசுகிறார். மாநிலத்தில் எம்ஜிஆரும், மத்தியில் மோடியும் என உஷாராக காய் நகர்த்துவதுபோல அரசியலை துவக்கி உள்ளார்.
திவாகரனுக்கு உதவி
பாஸ்கரனுக்கும் திவாகரனுக்கும் ஓரளவு ஒத்து போனாலும், ஒருவருக்கொருவர் நெருங்கிய ஒட்டுதல் இல்லை. ஆனால் தினகரனை மட்டும் பாஸ்கரனுக்கு ஆகவே ஆகாது. புதிதாக ஆரம்பித்துள்ள கட்சியால் தினகரனுக்கு பிரஷர் ஏறித்தான் உள்ளது. திருவாரூர் தொகுதியில் பாஸ்கரன் நிற்க போகிறாரா என்று தெரியாது. ஒருவேளை தேர்தலில் நிற்காவிட்டால் திவாகரனுக்கு உதவி புரிய வாய்ப்பு உள்ளது.
கலக்கத்தில் தினகரன்
ஏனென்றால் தினகரனுக்கு எதிராக இந்த கட்சி ஆரம்பித்ததில் திவாகரனின் பங்கு அதிகமாகவே உள்ளதாம். இடைத்தேர்தலில் பாஸ்கரன் போட்டியிட்டால், தினகரனுக்கு இன்னும் சிக்கல்தான் என்கிறார்கள். ஆனாலும் சசிகலா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவது இவ்வளவு பேர்தானா? அல்லது இன்னும் வருவார்களா? தெரியாது... பார்ப்போம்!!