தினகரன் வீட்டில் பாதாள அறைன்னு பாத்தா செப்டிக் டேங்குதாங்க... நக்கலடிக்கும் மாஜி இன்பத் தமிழன்
தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறை என்று ஒன்று இல்லை. வெறும் செப்டிக் டேங்குதான் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தெரிவித்தார்.
சென்னை: தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறை என்று எதுவும் கிடையாது. வெறும் செப்டிக் டேங்குதான் உள்ளது. எல்லாரும் கட்டியுள்ளதுபோல்தான் அவரும் வீடு கட்டியுள்ளார் என்று தினகரனின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத் தமிழன் தெரிவித்தார்.
சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்த தொடங்கினர். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், விவேக், கிருஷ்ணப்பிரியாவின் வீடு, உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
அதேபோல் புதுவையில் உள்ள தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் ரெய்டு நிகழ்ந்தது. அங்கு உரமும், சாணியும்தான் இருக்கும் என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். ஆனால் அங்கு ரகசிய அறைகளும் அதில் முக்கிய ஆவணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
செப்டிக் டேங்க்தான்
இதுகுறித்து சன் நியூஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தினகரன் வீட்டில் பாதாள அறையும் இல்லை ஒன்றும் இல்லை. எல்லார் வீட்டிலும் எப்படி அறைகள் இருக்குமோ அப்படிதான் அவரது பண்ணை வீட்டிலும் உள்ளது. பாதாள அறையினு பார்த்தீங்கன்னா செப்டிக் டேங்க்தான் இருக்கும்.
எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் எம்.பி.க்கு போட்டி
அதிமுகவை பாஜக இணைத்துவிட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று சசிகலா தரப்பை கட்சி நடத்த விடாமல் செய்கின்றனர். பாஜகவுடன் இணைத்துக் கொண்ட பின்னர் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் எம்.பி.தேர்தலில் போட்டியிட போவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
லூசுகணக்கா பேசும் அமைச்சர்கள்
தற்போதுள்ள அமைச்சர்களின் செயல்பாடு மிகவும் வேதனையாக இருக்கிறது. லூசு கணக்கா பேசிகிட்டு இருப்பவர்களை எல்லாம் ஜெயலலிதா அமைச்சர்களாக்கிவிட்டார். இவர்கள் இப்படி பேசுவார்கள் என்று ஜெயலலிதாவுக்கு தெரிந்திருந்தால் இவர்களை அமைச்சர்களாக்கிவிட்டிருக்க மாட்டார்.
தேயிலைதான் இருக்கும்
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா ஓய்வெடுப்பார் என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். அது யார் பெயரில் உள்ளதென்று தெரியாது. அங்கு ரெய்டு நடந்தால் நடக்கட்டும். அங்கு நாற்காலிகளும், ஜெயலலிதாவின் உடைகளும், தேயிலை செடிகளும்தான் இருக்கும்.
கட்சியை வழிநடத்துவதான் அடுத்த பணி
ரெய்டு நடத்தி எங்களை பாஜக கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. அப்படி மிரட்டினாலும் பணிய மாட்டோம். கட்சியை வழிநடத்துவதுதான் அடுத்த பணி என்றார் அவர்.