திமுக ஆட்சேபனை நிராகரிப்பு... பெரும் இழுபறிக்கு பிறகு தப்பிப் பிழைத்த தினகரன்.. வேட்புமனு ஏற்பு!
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரிய திமுக வேட்பாளர் மருதுகணேஷின் ஆட்சேபணை மனுவை நிராகரித்ததார் தேர்தல் அதிகாரி.
சென்னை: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷின் ஆட்சேபணை மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி, தினகரனின் வேட்புமனுவை ஏற்றதாக அறிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
பலமுனை போட்டி உள்ள ஆர்.கே நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இன்று தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை பரிசீலிப்பது வருகின்றன.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் மற்றவர்களது மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. சசிகலா அணி வேட்பாளர் தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மனு 60 பக்கம் கொண்ட மனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் பன்னீர் அணியினர் தினகரனின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் வாதாடினர். தினகரன் சிங்கப்பூர் குடிமகன் என்றும், அன்னிய செலாவணி வழக்கில் ரூ28 கோடி அபராதம் வழங்கப்பட்டது குறித்து வேட்புமனுவில் தினகரன் குறிப்பிடவில்லை என்றும் இரு தரப்பினரும் வாதிட்டனர். இதனால் அவரது வேட்புமனுவை ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திமுகவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம், தினகரனின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது. இதனால் மாலையில் இழுபறி முடிவுக்கு வந்தது. சசிகலா அணி குஷியாக தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளது.