குக்கர் கடையை சோதிக்கலாம்.. மக்கள் மனதை?... டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி
குக்கர் கடையை சோதிப்பதினால் ஒரு பயனும் இல்லை, மக்கள் மனதில் டிடிவி தினகரன்தான் நிறைந்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
கோவை: குக்கர் கடையில் மட்டுமே அதிகாரிகளால் சோதனை செய்ய முடியும், மக்கள் மனதில் குக்கர் சின்னம் பதிந்து விட்டதால் அதை இவர்களால் சோதனை செய்ய முடியாது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
சென்னை ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அணி சார்பில் ஏராளமான பிரஷர் குக்கர்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் ராயபுரத்தில் உள்ள ஒரு குக்கர் கடையில் குக்கரை லஞ்சமாக பெற்றுக் கொள்ள ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கனை வைத்து மக்களும் குக்கர்களையும் பெற்று வருவதாகவும் ஐடி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று மாலை அந்த கடைக்கு தேர்தல் பார்வையாளர்களுடன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கி மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்களூர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரனை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.
குக்கர் கடையில் மட்டுமே அதிகாரிகளால் சோதனை செய்ய முடியும், மக்கள் மனதில் குக்கர் சின்னம் பதிந்து விட்டதால் அதை இவர்களால் சோதனை செய்ய முடியாது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.