தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்... எடப்பாடிக்கு ஆதரவால் தினகரன் அதிரடி
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக உள்ள தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவியை பறித்தார் டிடிவி தினகரன்.
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள தளவாய் சுந்தரத்தை அப்பதவியிலிருந்து டிடிவி தினகரன் நீக்கியுள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியை தளவாய் சுந்தரத்துக்கு அளிக்க பரிந்துரைத்தவர் டிடிவி தினகரன். இந்த விசுவாசம் காரணமாக தினகரனுக்கு சில டெல்லி தொடர்புகளை வலுவாக்கும் வேலைகளையும் செய்து வந்ததாக முதல்வருக்கு டெல்லியில் இருந்து தகவல்கள் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து தினகரனின் ஆதரவாளரான தளவாய் சுந்தரத்தை அப்பதவியிலிருந்து மாற்றிவிட்டு கே.பி.முனுசாமியை அப்பதவிக்கு நியமிக்க முதல்வர் உத்தேசித்திருந்தார். இந்நிலையில் அதிமுக இணைப்பின் போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கான அமைச்சர் பதவி குறித்து பேசியதை விட தனது மேலிட பிரதிநிதி பதவி குறித்துதான் அவர் அதிகம் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் தளவாய் சுந்தரம் அதிமுக பொதுக் குழு கூட்டத்திலும் பங்கேற்றார். முதல்வருக்கு ஆதரவாக தளவாய் சுந்தரம் செயல்படுகிறார் என்று சந்தேகத்தை இதன் மூலம் தீர்த்து கொண்ட தினகரன், அதிமுக அமைப்பு செயலாளராக உள்ள தளவாய் சுந்தரத்தின் பதவியை பறித்து உத்தரவிட்டுள்ளார்.
தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்... எடப்பாடிக்கு ஆதரவால் தினகரன் அதிரடி pic.twitter.com/kobnWWLoGU
— Oneindia Tamil (@thatsTamil) September 14, 2017
அத்துடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பதவியிலிருந்து அ.தமிழ்மகன் உசேன் என்பவரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். கட்சி பதவிகளில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு மட்டுமே உள்ளது என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தினகரன் தளவாய் சுந்தரத்தை கட்சி பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.