கைவிட்ட ஜக்கையன்.. அமைப்புச் செயலாளர் பதவியை பிடுங்கிய தினகரன்!
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஜக்கையன் எம்எல்ஏவை நீக்கி அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை : தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவியதையடுத்து ஜக்கையனை அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்த மூன்று அணிகளில் ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்தது. அணிகள் இணைந்ததையடுத்து ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பதவியை பகிர்ந்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இதே போன்று கட்சியிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி உள்ளிட்டோருக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு அணிகள் இணைந்ததையடுத்து தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார்.
கட்சிப் பொறுப்புகளை பறிக்கும் தினகரன்
எனினும் கட்சியில் தனக்கே அதிகாரம் இருப்பதாக தொடர்ந்து தினகரன் கூறி வருகிறார். தனக்கு எதிராக முதல்வர் பழனிசாமி அணியில் இருப்பவர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாக தனது ஆதரவு ஆட்களை அந்தப் பதவிகளுக்கு நியமித்து வருகிறார்.
எதிர்ப்பாக செயல்பட்டதால் நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை பிடுங்கியுள்ளார். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அணி தாவிய ஜக்கையன்
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏ ஜக்கையன் இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி அணிக்குத் தாவினார். பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளதன் ஆதராமே ஜக்கையன் அணி மாறியது என்று தினகரன் விமர்சித்து வருகிறார்.
அமைப்புச் செயலாளர் பதவி பறிப்பு
இந்நிலையில் ஜக்கையன் எம்எல்ஏவை அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார். தங்கள் அணியில் இருந்த வரை அவைத் தலைவர் பொறுப்பை கேட்டு வந்தார் ஜக்கையன் என்று கூறியிருந்த தினகரன், அவர் அணிமாறி தன்னை கைவிட்டதால் அவரது பதவியை பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.