தினகரன் தம்மை ஒரு 420 என அழைத்துக் கொண்டவர்.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது டிடிவி தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தினகரன் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதாக சொல்வது பொய் என்றும் அவர் கூறினார்.
தமக்கு இன்னொரு முகம் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார் என்றும் ஓ பன்னீனர்செல்வம் குற்றம்சாட்டினார். ஜெ. மீது பாசம் இருந்திருந்தால் வீடியோவை வெளியிட்டிருக்கமாட்டார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட 2ஜி வழக்கில் திமுகவினர் விடுவிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் முதல் ஆளாய் வாழ்த்து சொல்லியிருப்பது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே தான் அரசியலுக்கு வந்தவன் என்றும் எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். துரோகம் செய்தவர்கள் கட்சி விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.