சசிகலா மீதான களங்கத்தை போக்கவே வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டார்.. தினகரன் பூசி மெழுகல்
சசிகலா மீதான களங்கத்தை போக்குவதற்காகவே வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதாக தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா மீதான களங்கத்தை போக்கவே வெற்றிவேல் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியிட்டதன் மூலம் வாக்காளர்களின் மனதுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறி தேர்தல் ஆணையமும் வெற்றிவேல் மீது வழக்குபதிவு செய்தது. இதற்கு சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுகுறித்து தினகரன் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ஆர்கே நகருக்கு வந்த அவர் வீடியோ குறித்து இன்று மாலை சந்தித்து விளக்கம் அளிப்பதாக தினகரன் கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான் வெற்றிவேல் வெளியிட்டது. சசிகலா மீதான பழியை கழித்து கொள்ள வீடியோவை வெளியிட தொண்டர்கள் வலியுறுத்தினர். எனினும் நாங்கள் வெளியிடவில்லை.
கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது சவப்பெட்டியுடன் ஓபிஎஸ் குரூப் பிரசாரம் செய்தது. அப்போதும் கூட இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை.
சசிகலா மீது கொலை பழி போடுவதால் விரக்தி அடைந்த வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார். ஜெயலலிதா வீடியோவை மார்ச் மாதம்தான் கொடுத்தேன்.வீடியோவை எடுத்தவர் சசிகலாதான்.
என்னை சந்தித்து வெற்றிவேல் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தார். சிறையில் சசிகலாவிடமும் மன்னிப்பு கேட்பதாக வெற்றிவேல் கூறினார் என்றார் தினகரன்.