மெர்சல் படத்தை பிரபலப்படுத்திய தமிழிசைக்கு படக்குழு நன்றி சொல்ல வேண்டும்.. தினகரன் கிண்டல்
மெர்சல் படத்தை பிரபலப்படுத்திய தமிழிசைக்கு படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரன் கிண்டல் அடித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்திய தமிழிசை உள்பட பாஜக தலைவர்களுக்கு படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனம் குறித்து பாஜகவினர் பல்வேறு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எனினும் விஜய்க்கும், அப்படத்திற்கும் ஆதரவு பெருகி வருகிறது.
சிறிய விஷயத்தை ஊதி பெரிதுப்படுத்திவிட்டதாக பாஜக தலைவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெர்சல் குறித்து, டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மெர்சல் ஒரு தமிழ்த் திரைப்படம். அதனை இந்திய அளவில் பிரபலப்படுத்தியதற்காக தமிழிசை சௌந்தரராஜனுக்கும், எச்.ராஜாவுக்கும் படக்குழுவினர் நன்றி சொல்ல வேண்டும்.
மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத்தானே மெர்சல் படத்தில் வசனமாக பேசியுள்ளனர். இவர்களுக்கு பிரச்சினை என்றால் படக்குழுவினரை அழைத்து குறைகளை கூறி இருக்க வேண்டும்.
ஆனால் மிரட்டல் விடுப்பது போன்ற பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் அரசியல்வாதியாக உள்ள அனைவருக்கும் தலைக்குனிவை உண்டாக்கியுள்ளது என்றார் தினகரன்.