நிதியை "சுவாஹா" செய்தால் இப்படித்தான் நடக்கும்.. தினகரன் பொளேர்!
அணைகளுக்கு பெயிண்ட் அடித்தால் போதுமா என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூர்: முக்கொம்பு அணை ஏன் உடைந்தது என்று டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிக நாட்கள் அதிக உபரிநீர் வெளியேறிய அழுத்தத்தினால் முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மணல் கொள்ளையே
இல்லை... இல்லை... முக்கொம்பு அணையின் 9 மதகுகள் உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இதுகூட காரணம் இல்லை... 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடையகாரணமாகும் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
மதகு உடைப்புக்கு காரணம்?
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தரப்பில் காரணம் கூறி வரும் வேளையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் மதகு உடைப்புக்கு காரணம் என்னவென்று கூறியுள்ளார். பெரம்பலூரில் தினகரனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.
அம்மா போட்டோவை எரித்தவர்
அப்போது, அதிமுக பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளாரே என்று கேட்டனர். அதற்கு தினகரன், "அவர் அதிமுகவில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். போட்டி திமுகவில் இருந்துகொண்டு அம்மாவின் போட்டோவை எரித்தவருக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை" என்றார்.
சுவாஹா-வான நிதி
இதையடுத்து செய்தியாளர்கள், முக்கொம்பு அணை உடைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றனர். அதற்கு தினகரன், "முதலில் அணைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு வெறும் பெயிண்ட் அடித்துவிட்டால் போதுமா? அதுக்குண்டான நிதியை "சுவாஹா" செய்ததால்தான் முக்கொம்பு அணை இடிந்து விழுந்துள்ளது. இதற்கும் தேர்தல் நேரத்தில் மக்கள் பதிலடி தருவார்கள்" என்றார்.