ஆமா, இந்த ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் எதற்கு தினகரன் சார்?... எப்பத்தான் வெளில வருவாங்க??
தினகரன் சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் எப்பத்தான் வெளியே வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் எப்போதும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து பேசி வரும் நிலையில் அந்த செல்கள் எப்போதுதான் வெளியே வருவார்கள் என்பது குறித்து கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக மோதல்கள் ஏற்பட்டன. இதனால் தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்கள் தனித்து செயல்பட்டனர்.
பின்னர் ஒரு கட்டத்தில் பேசிய தினகரன் இந்த 18 பேர் மட்டும் அல்ல, இன்னும் ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி அணியில் உள்ளனர். அவர்கள் வெளியே வருவார்கள் என்று தினகரன் தெரிவித்திருந்தார்.
ஆளுநரிடம் மனு
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அப்போதும் 10 அமைச்சர்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் என்று டிடிவி தினகரன் கூறினார். அவர்கள் யார் என்று கேட்டபோது வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
ஸ்லீப்பர் செல்கள்
தினகரனுக்கு 19 பேர் ஆதரவளித்து வந்த நிலையில் ஜக்கையன் எம்எல்ஏ அங்கிருந்து முதல்வர் அணிக்கு தாவியதால் அதன் எண்ணிக்கை 18-ஆக இருந்தது. அப்போது வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில் ஜக்கையனை போல பலரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தர வருவார்கள். அங்கும் எங்கள் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் வைத்திலிங்கம்.
பரோலில் வந்த சசிகலா
சசிகலா பரோலில் வந்த போது அவரை சந்திப்பீர்களா என்று அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலா. ஆனால் என்னுடைய விருப்பு வெறுப்புகளை அடக்கிக்கொண்டு ஜெயலலிதாவின் பிள்ளையாக இருக்கிறேன் என்றார். இதையடுத்து பேட்டி அளித்த தினகரனும், சி.ஆர்.சரஸ்வதியும் செல்லூர் ராஜூவை ஸ்லீப்பர் செல் என்றனர். ஆனால் அதை செல்லூர் ராஜூ மறுத்தார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு
கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வப்போது ஸ்லீப்பர் செல்கள் குறித்து பேசி வந்த தினகரன், எடப்பாடி ஆட்சியின் ஆயுள் காலத்தையும் நாள் கணக்கில் குறித்து வந்தார்.
எங்கே அவர்கள்
இந்த நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து தூத்துக்குடியில் தினகரன் கூறுகையில் 20 ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி அணியில் உள்ளனர். அவர்கள் தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளார். ஆவுன்னா ஸ்லீப்பர் செல்கள் ஸ்லீப்பர் செல்கள் என்று தினகரன் கூறி வந்த நிலையில் அவர்கள் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர்கள் வெளியே வந்தாலும் தினகரன் என்ன செய்ய போகிறார். இவர் கூறுவதை பார்த்தால் வடிவேல் காமெடி போல் வரும் ஆனா வராது போல் உள்ளதே...!