மருத்துவமனையில் நைட்டியில் இருந்த ஜெயலலிதா.. வீடியோ வெளியிடாததற்கு தினகரன் கூறும் காரணம்!
அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நைட்டி அணிந்திருந்ததால் அந்த வீடியோ காட்சிகளை வெளியிடவில்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது நைட்டி அணிந்து கொண்டு டிவி பார்க்கும் காட்சிகள் உள்ளன, ஆனால் அவரது பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதாலேயே அந்தக் காட்சிகளை வெளியிடவில்லை என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது : நான் மாறி மாறிப் பேசுபவன் அல்ல, அப்படி பேசுபவர்களின் முகத்திரையை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தோலுரித்துக் காட்டுகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகளை கேட்கின்றனர்.
எங்களிடம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் உள்ளன. மருத்துவமனையில் ஜெயலலிதா சாப்பிட்ட போது நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள், பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்.
நைட்டியில் இருந்தார்
சிசிடிவி காட்சிகள் அப்பலோவில் தான் உள்ளன. ஜெயலலிதா நன்றாக உடல் எடை குறைந்திருந்ததால் நாங்கள் அவர்களை வீடியோ எடுத்தோம். அந்த வீடியோவில் ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.
யாரும் பார்த்ததில்லை
ஜெயலலிதாவை வீட்டில் இருக்கும் எங்களைத் தவிர யாரும் நைட்டியில் பார்த்ததில்லை. 1989ல் ராஜீவ்காந்தி வந்து ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த போதும் கூட உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு தான் இருப்பார். அப்படி வாழ்ந்தவர் நைட்டியில் இருக்கும் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று தான் வெளியிடவில்லை.
வெளியிட சசி அனுமதிக்கவில்லை
நைட்டியில் அங்குமிங்கும் விலகியிருப்பது போன்று இருப்பதால் அதனை வெளியிட வேண்டாம் என்று சசிகலா சொன்னார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதே அந்தக் காட்சிகளை வெளியிட வேண்டும் என்று அனைவரும் கோரினர்.
விசாரணை ஆணையத்திடம் அளிப்போம்
ஆனால் சசிகலா தான் நீதி விசாரணை நடத்தினால் அங்கு தாக்கல் செய்யலாம், பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டாம் என்று சொல்லி இருந்தார். விசாரணைக் கமிஷன் அளித்தால் அதற்கு பதிலளிக்க வேண்டியது அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் பயம் இல்லை.
அமைச்சர்களுக்குத் தான் சிக்கல்
இப்போதைய நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தினாலும் சரி, இன்டர்போலே விசாரணை நடத்தினாலும் உண்மையைச் சொல்வோம். மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்களுக்குத் தான் சிக்கல், திட்டமிட்டே சதி செய்கிறார்கள். இதற்கு நாங்கள் பதில் சொல்லத் தேவையில்லை, தொண்டர்கள் மத்தியிலோ மக்கள் மத்தியிலோ எந்த குழப்பமும் இல்லை.