ஜெயலலிதாவை வீடியோ எடுத்ததே சசிகலாதான்... தினகரன்
ஜெயலலிதாவை வீடியோ எடுத்ததே சசிகலாதான் என்று தினகரன் தெரிவித்தார்.
சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை எடுத்தது சசிகலாதான் என்று தினகரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்புகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவரை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வீடியோ, புகைப்படங்கள் ஏதும் வெளியிடப்படாததால் மக்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் சசிகலா மீது கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா மீதான களங்கத்தை துடைக்கவே இந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்தார்.
மேலும் தான் வீடியோ வெளியிட்டது சசிகலா, தினகரனுக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. தினகரனிடம் இருந்த வீடியோ வெற்றிவேலிடம் சென்றது எப்படி என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்க இன்று தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
இதை எடுக்க சொன்னது ஜெயலலிதா. எடுத்தவர் சசிகலா. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது வெற்றிவேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று கோரி என்னிடம் வீடியோவை கேட்டார்.
அதை நான் அவருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பினேன் என்று தினகரன் தெரிவித்தார்.