விஜயபாஸ்கரை போட்டு கொடுத்த கறுப்பு ஆடு யாரு? நெருக்கடியில் தினகரன்!
தினகரனுக்கு நெருக்கமான தென்மாவட்ட பிரமுகர்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து புள்ளி விவரங்களுடன் வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்ததே தினகரனுக்கு மிக நெருக்கமான தென்மாவட்ட பிரமுகர்தான்....அவரை தூக்கியடியுங்க என தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம் அமைச்சர்கள்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அதிமுக, தினகரன் வசமானது. என்னதான் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதும் நிழல் முதல்வராக தம்மை நினைத்துக் கொண்டிருக்கிறார் தினகரன்.
மீண்டும் வந்த தென்மாவட்ட பிரமுகர்
தினகரனுடன் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கை கோர்த்துக் கொண்டு எடப்பாடிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் ஓரம்கட்டப்பட்டிருந்த தென்மாவட்ட பிரமுகரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார் தினகரன்.
தமக்கே முதலிடம்
அவருக்கு டெல்லி பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் தினகரன். அதேநேரத்தில் அந்த பிரமுகரோ தினகரனுக்கு அடுத்ததாக தாம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு நெருக்கமான நபர்களை காலி செய்வதில் மும்முரம் காட்டியிருக்கிறார்.
சிக்கிய விஜயபாஸ்கர்
இதில் ஒன்றுதான் விஜயபாஸ்கர் தொடர்பாக புகாரும் கூட. அந்த தென்மாவட்ட பிரமுகர் தரப்பில் இருந்துதான் துல்லியமாக விஜயபாஸ்கர் தொடர்பான அத்தனை விவரங்களும் வருமான வரித்துறைக்குப் போனதாம். ஏற்கனவே சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தில் தம்முடைய சைலண்ட் பார்ட்னர் விஜயபாஸ்கர் என கூறியிருந்தார்.
மீளவே முடியாதாம்...
அப்போது இருந்தே குறிவைத்து காத்திருந்த வருமான வரித்துறை வசமாக வளைத்துப் போட்டது விஜயபாஸ்கரை. இப்போது எந்த வகையில் விஜயபாஸ்கர் தப்பிவிடாதபடி பிடியை நெருக்கி வைத்திருக்கிறது வருமான வரித்துறை. இதனால் செம கடுப்பில் இருக்கும் விஜயபாஸ்கர் அமைச்சரவை சகாக்கள், அந்த தென்மாவட்ட பிரமுகர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் அவரை காலி செய்யுங்கள் என தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனராம்.