அதிமுக பிதாமகன் போல டிடிவி தினகரன் காட்டிக் கொள்கிறார்... கேபி. முனுசாமி பாய்ச்சல்
டிடிவி தினகரன் தனக்கு தானே பதவியேற்பு விழா நடத்திக் கொண்டதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக தனக்கு தானே பதவியேற்றிருப்பது வருந்த தக்கது என முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் தன்னை அதிமுகவின் பிதாமகன் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு அறிவித்தார். அவர் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கேபி.முனுசாமி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், டிடிவி தினகரன் அதிமுகவின் பிதாமகன் போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். தனக்கு தானே பதவியேற்பு விழா நடத்திக்கொள்வது வருந்த தக்கது என்றார்.
தினகரனின் பதவியேற்பு முறை சரியல்ல என்றும் கேபி.முனுசாமி தெரிவித்தார். ஓபிஎஸ் அணியில் உள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தினகரன் மற்றும் வெங்கடேஷை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.