ஆர்கே நகரில் பாஜகவால் 500 ஓட்டு கூட வாங்க முடியாது! - டிடிவி தினகரன்
சென்னை: ஆர்கே நகரில் நான் வெற்றி பெறுவேன் என உறுதியாகத் தெரிந்ததால்தான் தேர்தலை ரத்து செய்துள்ளனர் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து அறிவிப்புக்குப் பிறகு அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை. ஆர் கே நகர் தொகுதியில் 70 சதவீதத்துக்கு மேலான பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டேன்.
நான் வெற்றி பெறுவேன் என்பது உறுதியாகத் தெரிந்ததால் தேர்தலை நிறுத்த பலர் முயற்சி மேற்கொண்டனர். அதிகாரம் இருப்பதால் ஆணையம் தேர்தலை நிறுத்தி உள்ளது. பல்வேறு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றியது. யாரும் குறுக்கே நிற்கவில்லை. இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நிறுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க ஆணையத்திடம் மீண்டும் கோருவோம்.
தேர்தல் நேரத்தில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்த அவசியம் என்ன? விஜயபாஸ்கர் வீட்டில் பணம் கைப்பற்றியதாகக் கூறுவதில் உண்மையில்லை.
ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். அதிமுகவை அழிக்க இன்னும் சிலர் சதி செய்கின்றனர்.
இங்கே அமைதியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தோம். எனது வெற்றி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே எப்போது தேர்தல் வைத்தாலும் என் வெற்றியைத் தடுக்க முடியாது.
ஆர்.கே.நகரில் பாஜக 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. பாஜகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. 4 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம்," என்றார்.