அரசியல்வாதிகள் கோவணம் கட்டி கொண்டு பிளாட்பார்மில் இருக்க வேண்டுமா?... தினகரன் கேள்வி
அரசியல்வாதிகள் என்றால் கோவணம் கட்டிக் கொண்டு பிளாட்பார்மில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஐடி ரெய்டு குறித்து பேசிய டிடிவி தினகரன், அரசியல்வாதிகள் என்றால் கோவணம் கட்டிக் கொண்டு பிளாட்பார்மில் தங்க வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று நறுக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனம் உள்ளிட்ட 137 இடங்களில் இன்று 3-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் தினகரனின் பண்ணை வீட்டில் ரகிசய அறைகள் இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுவையில் உள்ள எனது வீட்டிலும், எனது உதவியாளர் வீட்டிலும் ரெய்டு முடிந்துவிட்டது. இந்த ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குரல் கொடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
கடமையை செய்தார்கள்
வருமான வரித்துறை ரெய்டை நாங்கள் வரவேற்கிறோம். புதுவையில் உள்ள பண்ணை வீட்டில் எந்தவித பாதாள அறைகளும் இல்லை. அது தவறான தகவல். வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்தார்கள். எந்தவித தவறான தகவல்களையும் அவர்கள் வெளியே பரப்பவில்லை.
சிறிய குரூப்
மெகா ரெய்டு என்று காண்பிப்பதன் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. நாங்கள் காந்தியின் பேரன்கள் கிடையாது. ஆனால் எங்களை குற்றம் சொல்பவர்கள் காந்தியின் பேரன்களா அல்லது பேத்திகளா என்பது தெரியாது. எங்களது பெரிய கட்சி அல்ல. சசிகலா தலைமையில் இயங்கும் ஒரு சிறிய குரூப். அவ்வளவே.
ரெய்டு நடைபெற்றது
பெரிய பெரிய கட்சிகள் எங்களை அழித்துவிட்டு வளர வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. எந்த ஒரு கட்சியையும் அழித்துவிட்டு யார் வேண்டுமானாலும் வளரலாம் என்று யாரும் நினைக்க முடியாது. 1996-ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு ரெய்டு நடைபெற்றது.
விஷமத்தனமான செய்தி
சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். ஆனால் அதேவேளையில் 1800 அதிகாரிகளை வைத்து எங்களுடன் என்றோ சந்தித்தவர்கள், என்றோ பழகியவர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பதன் பின்னணிதான் புரியவில்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பிருப்பதாக சிலர் விஷமத்தனமான செய்திகளை பரப்புகின்றனர்.
ரெய்டு ஏன்
சேகர் ரெட்டி டைரியில் உள்ளவர்களின் வீடுகள், அதில் பெயர் இருப்பதால் அச்சத்தில் உள்ளவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தாமல் தங்கதமிழ் செல்வனின் உதவியாளர் வீட்டில் ரெய்டு நடப்பது ஏன். எனது உறவினர்கள் வீடுகளில் பணம் ,தங்கம் பறிமுதல் செய்ததெல்லாம் என் வீட்டில் பாதாள அறை உள்ளது என்று கூறிய தகவலை போன்றுதான்.
1989-ஆம் ஆண்டு கட்டிய வீடு
பணம் எடுத்தாலே அது கருப்பு பணம் என்று சொல்லமுடியாது. வாய்க்கு வந்ததையும் காதில் கேட்டதையும் பரப்புவது உண்மையாகாது. டிவி தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு நெறியாளர் கேட்கிறார், எம்.பி. ஓய்வூதியம் வாங்கும் தினகரனுக்கு எப்படி இந்த வீடு என்கிறார். நான் எனது தொழில் லாபத்தின் மூலம் 1989-இல் கட்டிய வீடு அது. 1999-ஆம் ஆண்டு எம்.பி. தேர்தலில் போட்டியிட்டபோது அவர் சின்ன பையனாக இருந்திருப்பார்.
பிளாட்பார்மை ஆக்கிரமிக்க வேண்டுமா?
அப்போது அரசியலுக்கு வந்ததால் எனது நிறுவனத்தை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு நான் வந்துவிட்டேன். அதனால் அரசியல்வாதிகள் என்றால் கோவணத்தோடு அலையனும்னு ஆசைப்படுகிறார்களா இல்லை பிளாட்பார்மில் தங்கனும்னு நினைக்கிறார்களா என்று தினகரன் ஆவேசமாக கேட்டார்.