பொதுக்குழு பரபர... அதிமுக தலைமை அலுவலகத்தில் பெங்களூரு கோர்ட் தீர்ப்பை ஒட்டிய டிடிவி ஆதரவாளர்கள்!
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்த உத்தரவை தினகரன் ஆதரவாளர்கள் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை : முதல்வர் பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த உத்தரவை டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டினர்.
சென்னை வானக்கரத்தில் முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு 2 ஆயிரத்து 140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் 296 பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் இடத்தை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
14 தீர்மானங்கள்
அழைப்பிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே திருமண மண்டபத்திற்குள் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் நீக்குவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடை இல்லை
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தையொட்டி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்குழுவிற்கு தடை கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு மனுவும் நேற்றே விசாரிக்கப்பட்டு பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்று கூறிவிட்டது.
பெங்களூரு கோர்ட் இடைக்காலத் தடை
எனினும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறியிருந்தது. இதனிடையே டிடிவி தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார்.
தலைமைஅலுவலகத்தில் ஒட்டியதால் பரபரப்பு
இந்த இடைக்காலத் தடை நகலை தினகரன் ஆதரவாளர்கள் இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒட்டியுள்ளனர். இதனால் கட்சியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.