அதிமுகவே முடங்கியிருந்தபோது கட்சி தாவல் எப்படி பொருந்தும்? தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் வாதம்
சென்னை: அதிமுகவே முடக்கி வைக்கப்பட்டிருந்தபோது கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் என்று டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் தரப்பு தாக்கல் செய்த வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கினார். சக நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு உள்நோக்கம் கொண்டது என்பதால், இந்த உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்பு வெளியானதையடுத்து, 3வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது.
இன்று முதல் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற உள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் வழக்கறிஞர் ராமன் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.
அவர் தனது வாதத்தின்போது, சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கவில்லை. ஆளுநரிடம்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி, மனு அளித்தனர். அப்போது அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இரட்டை இலை சின்னத்தையும் முடக்கியிருந்தது.
இப்படி ஒரு சூழ்நிலையில், கட்சி தாவல் தடை சட்டம் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட முடியும். மேலும், ஆளுநரிடம் மனு அளித்த எம்எல்ஏ ஜக்கையன், மீண்டும் எடப்பாடி பக்கம் சென்றதால் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதை சபாநாயகர் தவிர்த்துள்ளார். இதில் இருந்து, இந்த நடவடிக்கை உள் நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிவிட்டது.
சபாநாயகர் முடிவு என்பது இயற்கையான நீதிக்கே எதிரானது. பாரபட்சமானது. இவ்வாறு வழக்கறிஞர் ராமன் வாதிட்டு வருகிறார்.