எடப்பாடி இப்தார் விருந்து.. தினகரன் கோஷ்டி 30 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு.. அதிமுகவில் பரபரப்பு!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை டிடிவி தினகரன் கோஷ்டி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 30 பேர் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பி வைக்கப்பட்டது.
கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. இதை அவரும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இதே போல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகியது. இதனிடையே அ.தி.மு.க அம்மா அணியை சேர்ந்த அன்வர்ராஜ எம்.பி தினகரனை இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக அம்மா அணி நடத்தும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் புறக்கணித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்காததால் புறக்கணித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதிமுக நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சியை சொந்த கட்சி எம்எல்ஏக்களே புறக்கணித்துள்ளது அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.