எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும்!
சென்னை: எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழியுறுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளி வந்ததும் மீண்டும் கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு ஆரம்பத்தில் அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் பலர் தினகரனை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். இதுவரை 34 எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது தினகரனின் கட்சி பணிக்கு அமைச்சர்கள் யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று வழியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்றும், கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார் என்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக தெரிகிறது.
தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தருவோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏல்கள் கூறியுள்ளனர்.
மேலும், அதிமுக இப்தார் நிகழ்ச்சிக்கு டிடிவி தினகரன் தலைமையில்தான் நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.