ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர் அதிரடி கைது!
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
பணம் பட்டுவாடா
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை காண்பித்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பாக, வாக்காளர்களை தொகுதிக்கு வெளியே அழைத்து சென்று பணம் பட்டுவாடா செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வைரல் வீடியோ
பணம் விநியோகம் நடைபெறுவதை நிருபிக்கும் வகையில் ஆர்.கே. நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தை அணிந்து கொண்டு வீடு,வீடாக பணம் விநியோகம் செய்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.
திமுக புகார்
இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து வீடியோ ஆதாரங்களுடன் கூடிய புகார் மனு அளித்தார்.
தினகரன் ஆதரவாளர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் 38வது வார்டு வாக்காளர்களுக்கு தொப்பி அணிந்த நபர் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர் கருணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.