ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதரவாளரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் பறிமுதல்
ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதரவாளரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை : ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதரவாளரிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளருக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த போது அவரை அ.தி.மு.க.,வினர் மடக்கி பிடித்து உள்ளனர்.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அ.தி.மு.க., மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தி.மு.க, டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்நிலையில், இன்று கொருக்குப்பேட்டையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது டி.டி.வி தினகரன் ஆதரவாளர் செல்வி என்கிற பெண் அ.தி.மு.க.,வினரால் சிறைபிடிக்கப்பட்டார்.
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வியிடம் இருந்து ரூபாய் 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறும்போது, அ.தி.மு.க.,வினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
செல்வி குறித்து வெளியாகும் தகவல் பொய்யானது. டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அதன் மூலம் காவல்துறையை திசை திருப்பி ஆதாயம் அடைய அ.தி.மு.க.,வினர் நினைப்பதாக வெற்றிவேல் குற்றம்சாட்டி உள்ளார்.
கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் அருகே வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பணம் கொடுத்த போது, அதனை தட்டிக்கேட்ட டி.டி.வி தினகரன் ஆதரவாளரை அ.தி.மு.க.,வினர் தாக்கியதில் சண்முகம் என்பவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் வேளையில் அ.தி.மு.க மற்றும் டி.டி.வி தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.